புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளராக ராம்மோகன ராவ் இருந்தார். திடீரென 2016ல் தலைமைச் செயலக அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்களாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள். மாத சம்பளம் 2,25,000 என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.